தாயிப் நகரில் தாஹா நபிகள்...
நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய ஏழை உலகம்,
கேட்காமலேயே கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே திறந்த கதவு !
இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி ஊட்டி வளர்த்தவர்!
படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும் பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே பாடம் பயின்றன !
கந்தல் அணிந்த – இந்தக்
கருணை நபி கையால்தான்
அம்மண உலகம் ஆடையைப் பெற்றது!
பாலையில் முளைத்த – இந்த
பசுமர நிழலில்தான் வெயிலும்கூட இளைப்பாற வந்தது !
இந்த ஏழையை ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல் கிடைத்தது போன்று
இந்த உலகம் இறுமாப் படைந்தது !
மண்ணில் – இந்த மணிவிளக்கைக்
கண்டபின்தான் விண்ணும்
தன் சுடர்களுக்காய் வெட்கம் கொண்டது !
வல்லூறுகளும் – இவர் வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !
உயர்மறை மகுடி – இவர் ஊதியத்கைக் கேட்டவுடன் நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !
தனித்தனி சாதி அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !
பாட்டால் புகழைப் பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப் பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா பெரும் புகழ் கிடைக்கும்
அன்று – அந்தத் தாயிப் நகரில்
தாஹா நபிகள் !
தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்
ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !
வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !
உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !
பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !
அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !
தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !
ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?
எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !
Ads go here
Comments